நடந்து முடிந்த அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து சிறி லங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. சகல இன மக்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஊழல் அற்ற புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேளையில், நாட்டைவிட்டு வெளியேறச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிருப்தியாளர்கள் ஆகியோரை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு புதிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப் பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறிகிறோம். இன்னும் சிலர் கிட்டிய எதிர்காலத்தில் நாடு திரும்ப உள்ளதாகவும் அறிகிறோம்.
சிங்கள ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னைய அரசாங்கங்களதும், அரச படைகளதும் அதிருப்திக்கு மாத்திரமே ஆளாகி இருந்தனர். ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் இதற்கும் அப்பால் தமிழ் இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இப்போது முடிவு எடுக்க முடியாத சூழலே உள்ளது.
கடந்த காலங்களில் சிறி லங்காவில் அநேக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப் பட்டிருந்தார்கள். இன்று ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் அநேகர் இவ்வாறு கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஜி.நடேசன்மற்றும் டி.சிவராம் போன்றவர்களைப் பற்றிப் பேசுவது குறைவு.
இத்தகையோரின் கொலைகளைப் புரிந்தவர்கள் இன்னமும் சமூகத்தில் சுதந்திரமாக உலாவரும் நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது?
எனவே புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களை சிறி லங்காவிற்கு மீள அழைத்துக் கொள்வதில் புதிய அரசாங்கம் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால், கடந்த கால ஆட்சிகளின் போது கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாகவும், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நீதியான விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிவராம் நினைவு மன்றம் கேட்டுக் கொள்கிறது.
இதன் மூலமே இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் புலம்பெயர்ந்த ஊடகவிலாளர்களும் நம்பிக்கையோடு நாடு திரும்ப முன்வருவார்கள் என்ற சேதியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
சண் தவராஜா
No comments:
Post a Comment